Skip to main content

கேரளாவில் இன்று 53 பேருக்கு கொரோனா தொற்று, 322 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை: சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா தகவல் 

திருவனந்தபுரம்,

கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா ஞாயிற்றுக்கிழமை திருவனந்தபுரத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது: கேரளாவில் இன்று 53 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் மற்றும் கண்ணூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தலா 12 பேருக்கும், மலப்புரம் மற்றும் காசர்கோடு் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தலா 5 பேருக்கும், ஆலப்புழா, எர்ணாகுளம் மற்றும் பாலக்காடு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தலா 4 பேருக்கும், கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த 3 பேருக்கும், பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த 2 பேருக்கும், கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கும் இன்று நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கும் நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில்  18 பேர் வெளிநாடுகளிலிருந்தும், 29 பேர் வெளி மாநிலங்களிலிருந்தும் வந்துள்ளனர்.

 இவர்களில்  மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து வந்த 19 பேருக்கும், குஜராத்தில் இருந்து வந்த 5 பேருக்கும், தமிழ்நாட்டில் இருந்து வந்த 3  பேருக்கும், டெல்லி மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து வந்த தலா ஒருவருக்கும் நோய் பரவியுள்ளது. கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததின் மூலம் 5 பேருக்கு நோய் பரவி உள்ளது. இதில் ஒருவர் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த சுகாதார துறை ஊழியர் ஆவார். இன்று கொரோனாவுக்கு வயநாடு மாவட்டத்தை சேர்ந்த 53 வயதான பெண் கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் வைத்து  இறந்துள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த 20ம் தேதி துபாயில் இருந்து வந்தார்.  இன்று 5 பேர் நோயிலிருந்து குணமடைந்து வீட்டுக்கு சென்றுள்ளனர். தற்போது 322 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 520 பேர் குணமடைந்துள்ளனர். கேரளாவில் இதுவரை நோய் பாதிக்கப்பட்டவர் களின் எண்ணிக்கை 847 ஆகும். 

 இன்று வரை கேரளாவுக்கு விமானங்கள் மூலம் வெளிநாடுகளில் இருந்து 7,847 பேரும், கப்பல் மூலம் 1,621 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து சாலை வழியாக 79, 908 பேரும், ரயில்கள் மூலம் 4,028 பேர் என மொத்தம் 93,404 பேர் வந்துள்ளனர். கேரளாவில் தற்போது பல்வேறு மாவட்டங்களிலாக 95,394 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 94,662 பேர் வீடுகளிலும், 732 பேர் மருத்துவமனைகளிலும் உள்ளனர். இன்று கொரோனா அறிகுறிகளுடன் 188 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 1,726 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதுவரை 53, 873 பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் 52,355 பேருக்கு நோய் இல்லை என தெரியவந்துள்ளது. மேலும் சுகாதாரத்துறை ஊழியர்கள், வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் சமூக நெருக்கமுள்ள 8,027  பேரிடம் பரிசோதனை நடத்தியதில் 7,588 பேருக்கு நோய் இல்லை என தெரியவந்துள்ளது. இன்று 18 இடங்கள் ஹாட்ஸ்பாட் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இதையடுத்து தற்போது ஹாட்ஸ்பாட் பகுதிகளின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

date